Monday, July 1, 2013

அமைச்சர் அதாவுல்லா நாளை மன்னார் விஜயம்

தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா நாளை செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பேரில் அவர் மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இதன்போது புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலை மன்னார் விலேஜ் வீதி, கரிசல் வீதி, எஸ்ப்பிளனேட் வீதி மற்றும் பள்ளிமுனை கடற்கரைவீதி ஆகியன அமைச்சர் அதாவுல்லாவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின்  கீழ் இயங்கும் ஆசிய அபிவிருத்தி செயற்திட்டத்தின் நிதி உதவியின் கீழ் 180 மில்லியன் ரூபா செலவில் இந்த நான்கு வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நானாட்டான் பிரதேச சபைக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடமும் அமைச்சரினால் திறந்துவைக்கப்படவுள்ளது. 

இந்த நிகழ்வுகளில் வட மாகாண ஆளுநர் பீ.ஏ. சந்திரஸ்ரீ மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின்  செயலாளர்  ஆர்.ஏ.ஏ.கே. ரணவக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.