Sunday, July 29, 2012

முன்னாள் அமெரிக்க தூதுவர் பற்றீஷியா புட்டினஸ் அமைச்சர் றிசாத் சந்திப்

இலங்கையில் தமது பணிக்காலத்தை நிறைவு செய்து கொண்டு செல்லும் அமெரிக்கத் தூதுவர் பற்றீஷியா புட்டினஸ் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதீயுதீனை இன்று அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் தாம் மன்னார் மாவட்டத்துக்கு விஜயம் செய்ததாகவும்,அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடல்களைச் செய்ததாகவும் கூறிய தூதுவர்,வடக்கில் வாழும் பழைய அகதிகள் என்றழைக்கப்படும் முஸ்லிம்களையும் சந்தித்ததாகக் கூறினார்.அவர்களது வாழ்வு மிகவும் கஷ்டமானதாகவேயுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

 
இதே வேளை இலங்கை அரசாங்கம் சிரமம்மிக்க பணிகளில் ஒன்றாக இந்த மீள்குடியேற்றத்தைச் சந்தித்ததாகவும்,அதனை அவர்கள் செய்வதையும் தன்னால் காணமுடிந்ததாகவும் கூறிய பற்றீஷியா புட்டினஸ்,சர்வ சமூகம் இலங்கையின் மீள்குடியேற்றம் பற்றி முழுமையான தகவல்களை பார்ப்பதில் தாமதித்துள்ளதாகவும் கூறினார்.இதே வேளை மீள்குடியேறும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
அதே வேளை இலங்கை அரசாங்கம் அமெரிக்காவின் உதவிகளுக்கு நன்றி செலுத்துவதாகவும்,குறிப்பாக கண்ணிவெடி அகற்றல்,நிவாரண உதவிகள்,மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாடுகளுக்கு பெரும் பங்களிப்பினைச் செய்துள்ளதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தூதுவரிடத்தில் எடுத்துரைத்தார்.
வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் புத்தளம் வந்த போது அவர்களைப் பராமரித்து 20 வருடங்கள் உதவி செய்த மக்களுக்கும்,அமைப்புக்களுக்கும்,பள்ளிவாசல் தலைமைத்துவத்துக்கும் தமது நன்றிகளைத் தெரிவிப்பதாகவும்,90 சதவீதமான மக்கள் தமது பிரதேசத்தில் மீ்ள்குடியேற விருப்பம் கொண்டுள்ளதாகவும்,24 ஆயிரம் குடும்பங்கள் தமது பதிவுகளை வடக்கில் மேற்கொண்டுள்ளதாகவும் எடுத்துரைத்துள்ளார். இருந்த போதும் அவர்கள் வாழ்வதற்கான வசதியின்மை காணப்படுவதையும் தூதுவரின் கவனத்திற்கு அமைச்சர் கொண்டுவந்தார்.
குறிப்பாக இலங்கை அமெரிக்க வர்த்தக செயற்பாடுகள் பாராட்டுக்குரிய நிலையில் உள்ளதாகவும்,இலங்கையுடன் அமெரிக்கா கொண்டுள்ள நெருக்கமான தொடர்பாகவே ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதாகவும்,இரு நாடுகளின் வர்த்தகத் துறை செயற்பாடுகளுக்கு அமைச்சர் றிசாதின் பணி வலு சேர்த்துள்ளதாகவும் தூதுவர் பற்றீசியா புட்டினஸ் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.